முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார்பி [சிறுகதை]


“அனிதா, யுவர் கொஸின் பேப்பர் இஸ் அவுட்.”

பார்லரில் வட்டமாய் அமர்ந்து சாஃப்டி ஐஸ்க்ரீமைச் சுவைத்தபடி சிரிப்பும் சிரிப்பும் மேலும் சிரிப்புமாய் இருந்த நெருக்க நீலக் கட்டமிட்ட பள்ளிச் சீருடை அணிந்த ஆறு பெண்களில் ஒருத்தியான நஃபீஸா சொன்ன போது ரேவதிக்கு நெஞ்சில் திக்கென்றது.

மஞ்சள் டாப்ஸுக்கு வெளியே தோள்பட்டையில் சுதந்திரமாய் எட்டிப் பார்த்த ஊதா ப்ரேஸியரை அலட்சியமாய் உள்ளே ஒளித்தவள் அனிதாவாய் இருக்க வேண்டும்.

ரேவதி அவசரமாய்க் கேட்டாள் -

“ஜிஓடி சீஸன் சிக்ஸ் எபிஸோட்ஸ் யாராவது டவுன்லோட் பண்ணி இருக்கீங்களா?”

“என்னடி பேச்சை மாத்தறியா?”

சிரித்தார்கள்.

“உனக்குத் தான் கொஸின் பேப்பர் கவலையே இல்லையே!”

மீண்டும் சிரித்தார்கள்.

ரேவதியும் சேர்ந்து சிரிக்க முயன்று தோற்றாள்.

*

மூடிய வார்ட்ரோப் கதவின் அரையாளுயரக் கண்ணாடி முன் நின்றிருந்தாள் ரேவதி.

சிஎஃப்எல் விளக்கின் தூய வெள்ளொளி மேலாடையற்ற அவள் அழுக்குப் பொன்னிற மேனி மேல் பட்டுத் தெறித்தது கண்ணாடியில் துல்லியமாய்ப் பிரதிபலித்தது. அவள் கண்கள் காம்புகளில் நிலைகுத்தி நின்றிருந்தன. ஒரு சிறுமியுடையதைப் போன்ற வெள்ளந்தியான முலைகள் எப்போதோ பார்த்த தாமரை மொக்கை நினைவூட்டியது.

பக்கவாட்டில் திரும்பி நின்று பார்த்தாள். சன்னமாய் வளைவு. கஞ்சத்தனச் செழிப்பு.

சட்டை இல்லாமல் வீட்டில் சுற்றும் அண்ணனின் நினைவு வந்தது. ரமேஷ் இவளை விட மூன்று வருடங்கள் பெரியவன். முதலாமாண்டு எஞ்சினியரிங் படிக்கிறான்.

மேலும் உற்றுக் கவனித்தாள். போன வாரம் பார்த்ததற்கு இம்முறை சற்றே மேடாகி இருப்பதாய்த் தோன்றியது. ஒவ்வொரு முறையும் இப்படித் தான் தோன்றுகிறது.

பெருமூச்சு விட்டாள். கொஞ்சமாய் மார்பு ஏறி இறங்கியதன் நளின வசீகரத்தை ரசித்தாள். இப்படி இருந்தால் பாய்ஸுக்குப் பிடிக்கும் என நினைத்துக் கொண்டாள்.

ஒரு கணம் தான். மாலை ஐஸ்க்ரீம் பார்லரில் கேலிக்குள்ளானது ஞாபகம் வந்தது.

ஊதிக் கொண்டிருந்த பலூன் எதிர்பாராத ஒரு கணத்தில் வெடித்தது போல் மொத்த உற்சாகமும் சட்டென வடிந்து தன் முகம் சூம்புவதைக் கண்ணாடியில் பார்த்தாள்.

“கதவை சாத்திட்டு என்னடி பண்ற? ட்ரெஸ் சேஞ்ச் பண்ண இவ்ளோ நேரமா?”

அம்மாவின் குரல் கேட்டதும் அவசரமாய் நைட்டியைத் தேடி எடுத்து, நுழைந்து கொண்டு, சீருடை பேண்ட்டைக் கழற்றி எறிந்து விட்டு, கதவைத் தாழ் நீக்கினாள்.

*


ரேவதி ப்ரா அணிவதில்லை என்பது ஊரறிந்த ரகசியம். அதற்கு இன்னும் அவசியம் ஏற்படவில்லை. அப்படித்தான் அவள் அம்மா நினைக்கிறாள். பள்ளித் தோழிகளுக்கு அது பிடித்தமான பொழுதுபோக்குப் பேச்சு. தமது ப்ரா ப்ராண்ட் பற்றிய பீற்றல்களில் தொடங்கி, கேலிக்குத் தடம் மாறி, தோரணையான ஆலோசனைகளுடன் முடியும்.

ஸ்கூல் வாட்ஸாப் க்ரூப்பில் யாரேனும் ப்ரெஸ்ட் பற்றிய ஏ ஜோக் அனுப்பினால் அதைக் காணாதது போல் நடிக்க வேண்டும். அப்படி ஒரு ஜோக் அனுப்பப்பட்டால் இவள் எதிர்வினை என்ன என்று அறிய எல்லாக் கண்களும் இவளையே உற்றுப் பார்ப்பதாகத் தோன்றும். அதற்காகவே எந்த ஏ ஜோக் அனுப்பப்பட்டாலும் கண்டு கொள்ளாது இருக்கத் தொடங்கினாள், நான்-வெஜ்ஜே பிடிக்காது என்பது மாதிரி.

ஆறு மாதம் முன் வாலிபால் டோர்னமெண்டுக்கு டீம் டிஷர்ட் அளவு கொடுக்கையில் இருப்பதிலேயே சிறிய XS கேட்டிருந்தாள். அதுவே தொளதொளவென்று இருந்தது. XXL டிஷர்ட்காரியான தாரிணியைக் கூட மெல்லிசாய்த் தான் கேலி செய்தனர். அவளோ கேலியைத் திசை திருப்பினாள். “ஆமாண்டி, எனக்கு நாலு, ரேவதிக்கு அரை” என்றாள்.

“வாலிபால் எதுன்னு வித்தியாசம் தெரியாமப் போயிடப் போகுது” என்று சொல்லத் துடித்தாள் ரேவதி. வேண்டாம். அது மீண்டும் பேட்மின்டன் பந்து, கோலி குண்டு என தனக்கே எதிராய்த் திரும்பும் எனக் கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியானாள்.

“இது ஒரு விஷயமே இல்லடி. எத்தனையோ பேர் கை, கால் ஊனமாப் பிறக்கறாங்க. அவுங்க எல்லாம் கான்ஃபிடென்ட்டா தானே வாழறாங்க!” எனும் அளவு அக்கறையான அன்பான தேற்றுதல்களைக் கேட்டிருக்கிறாள். அதற்குக் கேலியே மேல் என்றிருக்கும்.

“அதப் பிடிச்சு அமுக்கிட்டே இருந்தாப் பெருசாகிடும்டி. கல்யாணம் ஆனவங்களுக்குப் பார்த்திருக்கியா. திடீர்னு பெருசாகிடும். செஞ்சு பாரேன்.” - தமக்கு இருந்த மார்பகச் சந்தேகங்களை எல்லாம் அவளைப் பரிசோதனை எலியாக்கித் தெளிய நினைத்தனர்.

“அது பெருசா இருந்தா செக்ஸ் ஃபீலிங்க்ஸ் ஜாஸ்தினு சொல்வாங்கடி. நீ ரொம்ப குட் போல.” என்று எவளோ ஒரு முறை சொன்னாள். சொன்னவளுக்குப் பெரிதாய்த் தான் இருந்தது. ரேவதிக்குத் தன் விஷயத்தில் அந்தத் தர்க்கம் சரியென்பதாகப்படவில்லை.

ஆரம்பத்தில் இதை எதிர்த்துப் பார்த்தாள் ரேவதி. அதன் பலனாய் இரக்கம் மேலும் அதிகமாக வழிந்தோட, இப்போதெல்லாம் அப்பேச்சுகளைத்தவிர்க்கவே முனைகிறாள்.

*

ரேவதிக்கு ப்ரா அணிய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை யாரிடம் சொல்லி எப்படி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிந்திருக்கவில்லை.

இன்னும் அவள் ஸ்லிப் மட்டும் தான் அணிகிறாள். அம்மா அதை சிம்மீஸ் என்பாள். அதுவும் சுடிதார் அணிகையில் மட்டும். டிஷர்ட் அணியும் போது அதுவும் இல்லை.

ஒருமுறை கதவடைத்துக் கொண்டு அம்மாவின் ப்ரேஸியரை ரகசியமாய் அணிந்து பார்த்தாள். அது அவளுக்குப் பொருந்தவில்லை. போர்வையைப் போர்த்தியது மாதிரி பெரியதாய் இருந்தது. தோழிகளிடம் கடன் வாங்கி அணிந்து பார்க்கலாம் என்றால் கேட்கத் தயக்கமாய் இருந்தது. அப்படியே கேட்டாலும் நிச்சயம் அவளது அளவுக்குக் கிடைக்காது. எல்லாரும் தம் அளவு பற்றிச் சொல்லி பரிதாபத்துடன் ‘உச்’ கொட்டுவர்.


அப்பாவிடம் கேட்கக் கூச்சமாய் இருந்தது. கேட்டால் பொறுமையாய் ஏதேனும் பதில் சொல்வார். முதலில் எல்லாம் அவரைக் கட்டிக் கொண்டு தான் தூங்குவாள். “வாடி, என் சக்களத்தி” என்றுதான் அம்மா சொல்வாள். அவள் வயதுக்கு வந்த பின் அவராய் விலகி நின்று கொண்டார். இப்போது அவரது வாசனை கூட மறந்து போய் விட்டது.

ஏழாம் வகுப்பு முழு ஆண்டுப் பரிட்சை விடுமுறையில் நத்தக்காடையூரில் இருக்கும் அம்மாயி வீட்டில் நொண்டி விளையாடிக் கொண்டிருக்கும் போது வயிறு வலித்து, பாவாடை எல்லாம் ரத்தமாகி, மிரண்ட முகத்துடன் வயதுக்கு வந்தாள் ரேவதி.

சுமாராய்ப் படிக்கும் அவள் இப்போது மும்முரமாய்ப் பத்தாவது பொதுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். முழுசாய் மூன்றாண்டுகள் தீர்ந்து விட்டன. ஆனால் எந்த மாற்றமும் இல்லை. பார்க்க இன்னும் சிறுபெண் போலத் தான் இருக்கிறாள்.

அவள் ருதுவாவதற்கு சற்று முன் வெளியாகி இருந்த, அவளுக்குப் பிடித்த ஹாரிஸ் ஜெயராஜின் இரண்டாம் உலகம் பாடல் வரி “உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்து என்ன செழுமையடி” அவளுக்குள் இறங்கிக் கிளுகிளுப்பூட்டியது. தன் மார்பு பெரிதாய் வளர்ந்து அவஸ்தைப்படுத்துமே என எண்ணியெண்ணி வெட்கப்பட்டாள். அது எதற்கு வளர்கிறதாம் எனக் கோபித்தாள். அதற்குக் காத்திருந்தாள். இன்னும் காத்திருக்கிறாள்.

*

ரேவதிக்கு நடனம், நாடகம் போன்றவற்றில் ஆர்வம் உண்டு. பள்ளி ஆண்டு விழாப் போட்டிகளின் பரிசுப் பட்டியலில் அவள் பெயர் இல்லாத ஆண்டு இல்லை. ஓரிரு மாதங்கள் பாலே நடனம் கூடப்பயின்றாள். பின் செலவு அதிகமென நின்று விட்டாள்.

அவளது பள்ளி படிப்பை விட விளையாட்டு, கலைகள் ஆகியவற்றுக்குப் பெயர் போன ஒன்று. அதன் முன்னாள் மாணவர் ஒருவர் இந்திய க்ரிக்கெட் அணியில் கொஞ்ச காலம் இடம் பெற்றிருந்தார். இன்னொருவர் பெரும் ஆங்கில எழுத்தாளர். சமீபத்தில் சாகித்ய அகாதமி விருதுகள் திரும்பக் கொடுத்த சர்ச்சையில் அவர் பெயருடன் பள்ளியின் பெயரும் செய்திகளில் அடிபட்டது. இன்னும் ஒருவர் தமிழ் சினிமாவில் நடிகையாக ஆகி, பின் அரசியலில் இறங்கி எம்எல்ஏவாக இருக்கிறார்.

அஷோக் லேலேண்டில் மாதச் சம்பளக்காரரான அவள் அப்பாவுக்கு அந்தப் பள்ளியில் தம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பது ஆசை. படிக்க வைத்தார். தன் வாழ்வில் அவர் செய்த ஒரே ஆடம்பரச் செலவு என அதை மட்டும் தான் சொல்ல முடியும்.

ஏழு நிறுவனங்கள் ஸ்பான்ஸர்களாகப் பின்னியங்க, பிரபல தொலைக்காட்சி ஒன்றின் முன்னெடுப்பில் பள்ளிகளுக்கிடையேயான கலாசார விழா ஒன்றினை அறிவித்தனர்.

சென்னையில் அமைந்துள்ள பெரும் கான்வென்ட் மற்றும் சர்வதேசப் பள்ளிகளுக்கு மட்டுமான போட்டி அது. ரேவதியின் பள்ளியும் அதில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதாகத் திட்டமிட்டது. ஆங்கில நாடகப் பிரிவில் ரோமியோ - ஜூலியட்டை அரங்கேற்ற முடிவானது. அதில் ஜீலியட்டாக நடிக்க ரேவதி தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

அதை ஒருங்கிணைக்கும் கேத்ரின் மிஸ் ரேவதியின் அம்மாவிடம் பேச வேண்டும் என வரச் சொல்லி இருந்தாள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அவள் படிப்பு பாதிக்கப்படாது என்று உத்திரவாதத்தைத் தந்து விட்டு நாடகத்தில் பயன்படுத்தும் ஆடைகளுக்கான செலவுகள், அதை எங்கே, எப்படி, எப்போது செலுத்த வேண்டும், அடுத்த சில நாட்களின் மாலைகளில் ஒத்திகை இருக்கும் என்பதால் வீடு வர ஒரு மணி நேரம் தாமதமாகும், பள்ளிப் பேருந்து அது வரை காத்திருக்காது என்பதால் அவள் வீடு திரும்புவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும், இது காதல் நாடகம் என்பதால் ரோமியோவாக நடிக்கும் பையனுடன் லேசாய்த் தொட்டு நடிக்க வேண்டி இருக்கும், இவற்றுக்கு எல்லாம் ஒன்றும் ஆட்சேபணை இல்லையே? என்பதை எல்லாம் கேட்டுக் கொண்டவள் கடைசியாய் விஷயத்திற்கு வந்தாள்.

“ஒரு ப்ரப்போஸல். ரேவதி நாடகத்தில் நடிக்கும் போது ப்ரா போட்டு வந்தா நல்லது.”

ரேவதியும் அவள் அம்மாவும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.

“பார்த்தீங்கன்னா ரோமியோவா நடிக்கற பையன் அஜய் லெவந்த் ஸ்டேண்டர்ட் கய். நல்ல மஸ்குலின் பில்ட். ரெண்டு பேரும் சேர்ந்து நின்னா ரேவதியை விட அவனுக்கு மார் பெருசா இருக்கு. பார்க்கறவங்களுக்கு யார் பொண்ணுங்கற சந்தேகம் வரும்.”

“…”

“நாங்க ஜூலியட்டுக்கு வேற ஆள் போட முடியும். ஆனா ரேவதி இஸ் டேலண்டட். ரொம்ப நல்லாப் பேசி நடிக்கறா. பெஸ்ட் ஃபிட். இந்த ஒண்ணு தான் பிரச்சனை.  ஆனா இதுக்காக வேற யாரையாவது மாத்த விருப்பமில்ல. இந்தக் காம்படிஷன்ல ஜெயிக்கறதுல ஸ்கூல் பேரும் அடங்கி இருக்கு. இது டிவியில டெலிகேஸ்ட் ஆகி பப்ளிக் வோட்டிங்கும் வின்னர்ஸ் டிசைட் பண்ணக் கணக்கில் எடுப்பாங்க. அப்போ இந்த ஒரு விஷயம் ஆடியன்ஸுக்கு உறுத்தலாகி ரிசல்ட்டை பாதிச்சிடக் கூடாது. அதனால தான் சொல்றேன். இதை ரேவதி அப்பா கிட்ட பேசறத விட உங்க கிட்ட பேசறது கம்ஃபர்டபிள். அதனால தான் ஸ்பெஸிஃபிக்கா உங்களை வரச் சொன்னேன்.”

“ஓக்கே, மேடம்.”

தடுமாற்றமாய்ச் சொன்னாள் ரேவதியின் அம்மா. ரேவதி ஏதும் பேசவில்லை. விடை பெற்று எழுந்து வெளியேறுகையில் கேத்ரின் மிஸ்ஸின் குரல் முதுகில் ஒலித்தது.

“புஷ்அப் ப்ரா இல்லன்னா பேடட் ப்ரா இப்படி ஏதாவது வாங்கிக்கறது பெட்டர்.”

*

கேத்ரின் மிஸ் பேசியவை ரேவதிக்குப் பழைய நினைவுகளைக் கிளறி விட்டன.

ரேவதிக்கு மார்பக வளர்ச்சி குன்றியிருப்பதை ஆரம்பத்தில் அவள் உட்பட யாரும் பெரிதாய் எடுக்கவில்லை. ரேவதியின் எட்டாம் வகுப்பு கோடை விடுமுறையில் குழந்தைகளோடு வீட்டுக்கு வந்திருந்த அத்தை - அப்பாவின் அக்கா - “வயசுக்கு வந்தாளா, இல்லையா?” எனக் கேட்ட போது தான் ரேவதிக்கு சுருக்கென்றது.

அப்போதும் அம்மா பிடி கொடுக்கவில்லை.

“நானும் இவ வயசுல இப்படித்தான் இருந்தேன், அதெல்லாம் போகப் போகச் சரி ஆகிடும், இன்னும் சின்னப் பிள்ளை தானே!” எனச் சொல்லிக் கடந்து விட்டாள்.

போன வருடம் மேல் ஃப்ளாட் உமா ஆன்ட்டி கேட்ட போதும் அதையே சொன்னாள்.

“நான் கல்யாணமாகற வரை ஒத்தநாடி தான். கல்யாணமாகி ரமேஷ் உண்டானப்புறம் தான் கொஞ்சம் சதை வெச்சேன். இவளுக்கு இப்ப பதினஞ்சு வயசு தானே ஆகுது.”

அம்மா இப்படிச் சமாதானம் சொன்ன போது முழு உடம்பும் ஒல்லியாய் இருப்பதும் மார்பு மட்டும் ஊட்டமில்லாமல் இருப்பதும் ஒன்றா எனக் குழம்பினாள் ரேவதி.

“கல்யாணம் வரைக்கும் நான் ப்ரா போட்டதில்ல. கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்கறப்ப தான் அதையும் சேர்த்து எடுத்தாங்க.” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் அம்மா.

அந்த ஏமாற்றத்துக்குத் தன்னைப் பழி வாங்குகிறாளோ என நினைத்தாள் ரேவதி.

*

அன்று இரவு அப்பாவிடம் மெல்லிய குரலில் மிஸ் பகிர்ந்ததை அம்மா சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது ரேவதிக்கு. அப்பா என்ன சொன்னார் எனக் கேட்கவில்லை.

குப்புறப் படுத்தபடி Breaking Dawn நாவலின் 38வது அத்தியாயம் படித்துக் கொண்டிருந்த ரேவதியின் அறைக்குள் வந்தார் அப்பா. நைட்டியைச் சரி செய்து எழுந்து அமர்ந்தாள்.

“இண்டர்ஸ்கூல் ப்ளேல பார்டிசிபேட் பண்ணப் போறியாடா கண்ணு?”

“எஸ்பா. டிவில வரும்.”

“அம்மா சொன்னா. குட். ஆல் த பெஸ்ட் ரேவதி.”

“தேங்க்ஸ்பா.”

“டெய்லி ரிகர்சல் முடிஞ்சு திரும்பும் போது எனக்குக் கால் பண்ணு, நான் வழில இருந்தா உன்னை பைக்கில் பிக்கப் பண்ணிக்கறேன். இல்லன்னா பஸ்ல வந்திடு.”

“சரிப்பா.”

“தூங்கு. லேட்டாச்சு.”

“இன்னும் ஒன்றரை சேப்டர் தாம்பா. முடிஞ்சுது.”

“சரிடா. குட்நைட்.”

திரும்பி நடந்தார். கதவருகே சென்றதும் நினைவு வந்தாற் போல் சொன்னார்.

“இந்த நாடகத்துக்கு ஏதோ ட்ரெஸ்லாம் எடுக்கனும்னு சொன்னா. ஃப்ரியா இருக்கும் போது அம்மாவோட போய் அதுக்குத் தேவையானதெல்லாம் வாங்கிக்கோ ரேவதி.”

*

சித்தியை ஒருமுறை கல்யாணத்தில் பார்த்த போது “இன்னுமா ப்ரா போடறதில்ல நீ?” என ஆச்சரியப்பட்டாள். அம்மாவின் தங்கை. கல்யாணமாகி தற்போது பெங்களூரில் செட்டிலாகி விட்டாள். குழந்தை இல்லை. ஐடி நிறுவனத்தில் ப்ரோஜெக்ட் மேனேஜர்.

“என் சைஸ்க்கு இருக்குமான்னு தெரியலயே!”

“இப்பவெல்லாம் டீனேஜ் பொண்ணுங்களுக்குன்னே பிகினர்ஸ் ப்ரா அப்படின்னு விட்ருக்கான். 26 சைஸ்ல இருந்தே கிடைக்குது, ரேவதி. வாங்கிப் போடலாம்.”

“அம்மா தான் இப்ப வேண்டாம்னு சொல்லிட்டாங்க சித்தி.”

“ஏனாம்? என்ன பிரச்சனை அவளுக்கு? ஒண்ணு சொல்லவா? ப்ரா வெறும் ஏஸ்தடிக் மேட்டர் மட்டுமில்ல. அது கான்ஃபிடன்ஸ் கொடுக்கும். அது போட்டுக்கிட்டாத் தான் பொம்பளைன்னு ஒரு எண்ணமே வருது. நமக்கும் சரி, அடுத்தவங்களுக்கும் சரி.”

“ம்.”

“வீ ஷுட் செலிப்ரேட் அவர் ப்ரெஸ்ட்ஸ், ரேவதி.”

“…”

“போட ஆரம்பி நீ.”

“அம்மாகிட்ட சொல்றியா சித்தி?”

சித்தி பேசி இருப்பாள் போல. ஊர் திரும்பியதும் அம்மா பொரிந்து தள்ளினாள்.

“அவளுக்கு என்ன தெரியும்? ஒரு குழந்தைக்கு முலையூட்ட வழியில்ல அவளுக்கு. அவ என் மக மாரளவு பத்தி என்ன நாட்டாமை பண்றது? ப்ரா போடறதாம் ப்ரா.”

அதன் பிறகு ரேவதி ஒருபோதும் ப்ரா அணிவது பற்றி அம்மாவிடம் பேசியதில்லை.

*

கேத்ரின் மிஸ் சொன்ன மறுநாளே ப்ரா வாங்கக் களமிறங்கினர் அம்மாவும் மகளும்.

விசாரித்ததில் புஷ்அப் ப்ராக்களின் தொடக்க அளவே 32 இஞ்ச் என்று தெரிய வந்தது. அதுவும் நியாயம் தானே! இருக்கும் ஒன்றை மேலும் தூக்கிக் காட்டவே புஷ்அப் ப்ரா என நினைத்துக் கொண்டாள் ரேவதி. ஆனால் அந்த எண்ணம் அவளுக்கு வருத்தம் அளிக்கவில்லை என்பது ஆச்சரியமாய் இருந்தது. ப்ரா வாங்கப் போகிறோம் என்பதே அவளுக்கு பெருஞ்சந்தோஷத்தை நல்கி இருந்தது என்பது காரணமாய் இருக்கலாம்.

பேடட் ப்ராவும் அவளது அளவுக்கு எங்கு தேடியும் சிக்கவில்லை. மெஷரிங் டேப்பில் அவளது மார்பைச் சுற்றி வைத்துப் பார்த்து விட்டு உதடு பிதுக்கினார்கள். பாண்டி பஜாரில் நாயுடு ஹால் தொடங்கி சாலையோரக் கடை வரை விசாரித்து விட்டனர்.


எல்லாம் பார்த்து விட்டு கடைசிப் புகலிடமாய் அவளது சித்தியிடமே சரணடைந்தனர்.

அவள் உற்சாகத்துடன் “அதெல்லாம் ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்” என்று சொன்னதோடு எதற்கும் காத்திருக்காமல் அவளே ஆர்டரும் செய்து விட்டாள்.

இரண்டு நாட்களில் அமேஸான் புன்னகை ஒட்டப்பட்ட பார்சல் கைக்குக் கிடைத்தது. அம்மா விலையைப் பார்த்து விட்டு ரெண்டு ஐந்நூறு ரூபாயா என வாய் பிளந்தாள்.

வந்த பார்சலைப் பிரித்துப் பார்த்து ஆசையாய்த் தடவிப் பார்த்தாள். பிங்க் நிறத்தில் ஒன்று; வெண்ணிறத்தில் ஒன்று. வெண்ணிறம் கண்டதும் பார்பி நினைவு வந்தது.

*

அப்பாவின் நெருங்கின நண்பரான குணா அங்கிள் ரேவதியின் பிறந்த நாள் ஒன்றின் போது அந்த பார்பி பொம்மையைப் பரிசாகக் கொடுத்தார். விலை அதிகம் இருக்கும் என அப்பா சொன்னார். அதிகம் என்றால் எவ்வளவு என ரேவதிக்குத் தெரியவில்லை.

பார்பி பொம்மையுடன் கிச்சன் செட்டப், பாத்ரூம் ஐட்டம்ஸ், மேக்கப் டேபிள் எல்லாம் கொண்ட ஒரு செட் அது. ரேவதிக்கு மிகப் பிடித்தமான பொம்மை. அது சமையல் செய்வதாய், குளிப்பதாய், அலங்காரம் செய்வதாய் எல்லாம் விளையாடி இருக்கிறாள்.

அந்த பார்பி பொம்மைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. வெளியே சிவப்பு லாங் ஃப்ராக் அணிந்த அந்த பார்பி பொம்மை உள்ளே வெண்ணிற ப்ரேஸியரும் பேண்டீஸும் அணிந்திருக்கும். அவற்றையும் கழற்றி விட்டுத் தான் அதைக் குளிப்பாட்டுவாள்.

சமீப காலங்களில் மிக மெல்லிய அந்த ப்ரேஸியரை லாவகமாய்க் கழற்றும் போதும், குளிப்பாட்டுகையில் அதன் மார்புகளை விரல்களால் தடவும் போதும், குளித்த பின் மீண்டும் ப்ரா அணிவிக்கும் போதும் மனம் வினோதக் குறுகுறுப்புக்கு ஆட்படுகிறது.

ஆரம்பத்தில் தானே ஒரு பார்பி எனப் பாவித்தவள் இப்போது அதே பார்பியைத் தன் போட்டியாளராக அதுவும் தன்னை முந்தி ஓடிக் கொண்டிருக்கும் வெற்றியாளராகக் கருதத் தொடங்கினாள். அங்கம் அங்கமாய் அதனோடு ஒப்பிட்டுக் கொண்டாள்.

ஒரு மாதிரி பொறாமை, எரிச்சல். அதை அவள் விரும்பவில்லை. அது தொடர்ந்தால் பார்பியின் மேல் தனக்கு வெறுப்பு வந்து விடுமோ என அஞ்சினாள். அதனாலேயே இப்போதெல்லாம் அதை வைத்து விளையாடுவதில்லை. ஆனாலும் பார்வையில் படுவது போல் படுக்கும் அறையின் சிறுஅலமாரியில் அடைக்கலமாகி இருந்தது.

அது வந்த புதிதில் “நான் ஜட்டி மட்டும் தான் போட்ருக்கேன், பார்பி மாதிரி ஏன் மேலே ஏதும் போடலை?” என அம்மாவிடம் கேட்டு முதுகில் அறை வாங்கினாள்.

ப்ரா காத்திருப்பு அங்கிருந்து தொடங்கியது. அன்று அவளுக்கு ஏழெட்டு வயதிருக்கும்.

*

அடுத்த நாள் மாலை ரிகர்சல் இருந்தது. அதனால் ப்ரா அணிந்து செல்லலாம் எனத் நினைத்தாள். அம்மாவிடம் கேட்டால் ஏதாவது சொல்வாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலும் போட்டுச் செல்ல முடியாது. ராத்திரி உணவு முடித்ததும் மெல்லிய குரலில் கேட்டுப் பார்த்தாள். ஆச்சரியமாய் எந்த மறுப்புமின்றி ஒப்புக் கொண்டாள்.

ரேவதிக்கு அன்றைய இரவு உறக்கமே பிடிக்கவில்லை. நினைவு பூரா மறுநாள் ப்ரா அணிவது குறித்தே இருந்தது. எப்படி நடக்கலாம், எப்படி உட்காரலாம், என்ன பேச வேண்டும், யாரிடமெல்லாம் சொல்ல வேண்டும் என யோசனையாய் இருந்தாள்.

புரண்டு கொண்டே கிடந்தாள். எப்போதும் குண்டியில் வெயில் சாமரம் வீசுமளவு தூங்குகிறவள் அன்று காலையில் ஆறு மணிக்கே எழுந்து உட்கார்ந்து கொண்டாள். எம் டிவி, சென்னை டைம்ஸ் என நேரம் ஓட்டி விட்டுக் குளித்துத் தயாரானாள்.

இரண்டில் எதை அணிவது என்று யோசித்து பார்பிக்குப் போட்டியாய் வெண்ணிறம் அணியலாம் எனத் தீர்மானித்தாள். காம்படிஷன் அன்று பிங்க் அணிவது தான் பொருத்தமாய் இருக்கும் எனச் சமாதானம் சொல்லிக் கொண்டாள். வெள்ளையை எடுத்துப் பிரித்தாள். புதுத்துணி வாசனையை முகர்ந்து பார்த்து விட்டு அணிந்தாள்.

பின்புறம் கொக்கி மாட்ட முயன்று தோன்று அம்மாவை உதவிக்கு அழைத்தாள்.

“மஞ்சள் வைக்காமயே புதுத்துணி போட்டாச்சா?” எனக் கடிந்து கொண்டபடி மாட்டி விட்டாள். போருக்குப் புறப்படும் வீரன் ஆயுதம் தரித்தது போல் உணர்ந்தாள் ரேவதி.

கண்ணாடியில் பார்த்தாள். தான் ஒரு பேரழகி என அக்கணம் தோன்றியது அவளுக்கு.

இப்படியே வெறும் ப்ராவுடன் உலாப் போய் தெருவில் இருப்பவனை எல்லாம் தெறிக்க விட வேண்டும் என அபத்தமாய்த் தோன்றியது. சிரித்துக் கொண்டாள்.

வெட்கப்பட்டதாய்த் தோன்றியது. அது அவளைப் பெண்ணாய் உணரச் செய்தது.

ப்ராவின் மேல் ஸ்லிப் போடுவதா வேண்டாமா எனக் குழப்பம் ஏற்பட்டது. பின் போட்டுக் கொண்டாள். அதன் மேல் சீருடை அணிந்து பள்ளிக்குக் கிளம்பினாள்.

*

பள்ளிப் பேருந்தில் போய்க் கொண்டிருக்கையில் பெரும் பிரச்சனை தீர்ந்து விட்டதாய் நினைத்தாள். திடீரென தன் பிரச்சனை மார்பா ப்ராவா என யோசித்தாள். ஏதோ ஒரு கட்டத்தில் மார்பையே மறந்து போய் ப்ரா அணியும் ஏக்கமே பெரும் பிரச்சனையாய் மனதை ஆக்ரமித்து விட்டிருக்கிறதென உணர்ந்தாள். உண்மையில் மார்பே பிரச்சனை. அது தீர்ந்தால் தானாய் ப்ரா அணியும் சிக்கலும் சரியாகும். மார்பு தான். சின்ன மார்பு.

த்ரிஷா, இலியானா, சோனம் கபூரின் உடம்பு அழகாய்த்தானே இருக்கிறது. பலருக்கும் பிடித்து பிடித்து தானே இருக்கிறது. அஜய் கூட ஒருமுறை சொன்னானே, “வீ லைக் கேர்ள்ஸ் வித் ஸ்மால் பூப்ஸ். பட் நாட் ஃப்ளாட் செஸ்டட்.” எனக்குப் பட்டை மாரா? இல்லை. சன்னமான, அழகான, வடிவான மார்புகள். மற்றவளுக்கெல்லாம் மார்புகள் தொங்கும். ஆனால் எனக்கு ப்ரேஸியர் இல்லாமலே மார்பு நிமிர்ந்து தான் நிற்கிறது.

ஆனாலும் வித்தியாசம் இருக்கிறது. என் மார்புகளை எந்த ஆணும் முறைப்பதில்லை. என் டிஷர்ட் வாசகங்களைப் படிக்க எவனும் மெனக்கெடுவதில்லை. மீறிப் பார்ப்பவன் கண்கள் தவறாமல் ஏமாற்றத்தையோ இரக்கத்தையோ உடனடியாய்த் துப்புகின்றன.

அவள் வயதிலிருக்கும் மற்ற பெண்களின் வளர்ச்சியோடு யாரோ ஒப்பிட்டுப் பேசிய போது “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி உடம்புவாகு. சிலருக்கு உடம்பு விரிஞ்சிடும். சினிமால நடிக்கறாளே லக்ஷ்மி மேனன், அவளைப் பார்த்தா பத்தாவது படிக்கறாப்லயா இருக்கு? ரெண்டு புள்ள பெத்தவளாட்டம் இருக்கு.” என்றாள்.


அம்மாவே இன்னொன்றும் சொன்னாள். “இந்த சினிமாக்காரிக பாதிப் பேருக்கு நெஞ்சு சிறிசு தான். எல்லாம் உள்ள துணி வெச்சுக்கறாங்க.” அப்படி எனில் வண்ண வண்ணப் பூக்கள் படத்தில் ஏற்கனவே செழிப்பான மௌனிகா ஏன் ஜாக்கெட்டுக்குள் பேப்பரைச் சுருட்டி வைத்துக் கொள்கிறாள் என யோசித்தாள் ரேவதி. ஆனால் கேட்கவில்லை.

ஒருமுறை கடுப்பில் இன்னும் மேலே போய் “கோழிக்கு ஊசி போட்டுப் பெருசாக்கற மாதிரி அதையும் இதையும் தின்னு புள்ளைக முன்னாடியும் பின்னாடியும் பெருத்துக் கிடக்குதுங்க. ஒழுங்கா சாப்பிட்டுப் வளர்ற புள்ளைகள அதுகளோட கம்பேர் பண்ணி இளக்காரமாப் பேசினா எப்படி? குறை உண்மைல அவுங்களுக்குத் தான்.” என்றாள்.

அம்மாவைப் பழங்காலம் என்றும் சொல்ல முடியாது. அப்பாவிற்கு இணையாய்ப் படித்தவள். கல்யாணத்துக்குப் பின் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவள். ஆனால் குழந்தைகள் வந்த பின் வீட்டோடு இருந்து விட்டாள். ஆனால் இவ்விஷயத்தில் அவள் பேச்சு உள்ளே இருக்கும் கிராமத்துக்காரியைத் தான் வெளிக்கொணரும். ஒருமுறை தூரத்துச் சொந்தக்கார பெண்ணொருத்தியிலும் பேசிச் சண்டையானது.

“என் மக என்ன தேவிடியாளா? பெருசா மொலைய வெச்சு மினுக்கிட்டுத் திரிய?”

*

அன்று பள்ளியில் தோழிகளின் கண்ணில் படுவதுபோல் தோளோரம் ப்ரா பட்டையை லேசாய் வெளியிழுத்து விட்டாள். ப்ரேயர் முடிந்து இரண்டு வகுப்புகளும் முடிந்தன. யாரும் கண்டு கொண்டதாய்த் தெரியவில்லை. ரேவதிக்கு எரிச்சலாய் இருந்தது.

ப்ரேக்கின் போது மார்கரைட் தான் முதலில் கவனித்தாள்.

"என்னடி, மிட்டாய்க்கு ரேப்பர் போட்டாச்சு போல?"

எல்லோரும் வந்து பார்த்து விசாரித்தார்கள். நல்ல ப்ராண்ட் எனக் குறிப்பிட்டார்கள். ஆனால் பழைய மாடல் என்றார்கள். அடுத்து என்ன வாங்கலாம் என ஆலோசனை தந்தார்கள். இதை அணிகையில் ஸ்லிப் போட வேண்டாம் எனச் சிபாரிசு செய்தனர்.

தீபிகா அவளைக் கட்டிக் கொண்டு சொன்னாள். “இப்போ தான் சூப்பரா இருக்கே.”

மணி அடிக்கவும், கம்யூட்டர் மிஸ் ரோஸ் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது. எல்லோரும் அவரவர் இருக்கைக்குள் அடங்கினர். ரேவதிக்குப் பூரிப்பாய் இருந்தது.

*

இறுதியில் அப்பாவே சொன்ன போது பொறுக்காமல் டாக்டரிடம் கூட்டிப் போனாள்.

டாக்டர் அவள் டாப்ஸைக் கழற்றச் சொல்லித் தடவிப் பார்த்து விட்டு சிலபல ரத்தப் பரிசோதனைகள் எழுதிக் கொடுத்தாள். முடிவுகள் வந்ததும் மேய்ந்து விட்டு “ஒன்றும் பிரச்சனை இல்லை, ஹார்மோன் சுரப்பு எல்லாம் நார்மலாத் தான் இருக்கு. மெல்ல வளரும்” எனச் சொன்னாள். “இன்னும் எவ்வளவு நாள் ஆகும்?” என்ற ரேவதியின் முகத்திலிருந்த கேள்வியை தன் அனுபவத்தின் வழி அவள் படித்திருக்க வேண்டும்.

“பொதுவாய் 22 வயது வரை மார்பக வளர்ச்சி இருக்கும். கவலைப்பட வேண்டாம்.”

சத்து மாத்திரைகள் சில எழுதினாள். உணவுகளில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கும் உணவுகளைப் பட்டியலிட்டுச் சேர்க்கச்சொன்னாள். ஆப்பிள், ப்ளம், செர்ரி, ஸ்ராபெர்ரி, தர்பூசணி, க்ரீன் டீ, முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், ஏலக்காய், பூண்டு, பீட்ரூட், கேரட், வெள்ளரி, சோயா இப்படி. முடிந்தால் ரெட் வைன் எடுத்துக் கொள் என்றாள்.

கிளம்பும் போது “ப்ரெஸ்ட் சைஸ் சின்னதா இருக்கறது மெடிக்கலி ஒரு டிஸார்டரே இல்லை, போத் ஃபார் செக்ஸுவல் இண்டர்கோர்ஸ் அண்ட் ப்ரக்னன்ஸி.” என்றாள்.

“நாளைக்குக் குழந்தை பொறந்தா பால் கொடுக்கறதுக்கும் ஒண்ணும் குறையில்ல. இதை விட சின்னதை வெச்சு மூணு கொழந்தைக்கு ஆளுக்கு ஒன்றரை வருஷம் பால் கொடுத்தவ எல்லாம் இருக்கா. சைஸ் டஸிண்ட் மேட்டர் அட் ஆல் இன் திஸ்.”

ரேவதிக்கு கழுத்துக்குக் கீழான தன் உடலானது ஒரு ஜெர்ஸிப் பசுவுடையதாக மாறி விட்டதாகக் கற்பனை செய்து பார்த்தாள். அதன் மடி மட்டும் சுருங்கிப் போயிருந்தது.

*

மாலை ஒத்திகையின் போது அஜய் பார்த்து விட்டு “யூ லுக் டிஃபரெண்ட்” என்றான்.

சற்று இடைவெளி விட்டு “அண்ட் எஸ். வெரி ப்ரெட்டி” எனக் கண்ணடித்தான். அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் உள்ளே எங்கோ உயரே பறந்து கொண்டிருந்தாள்.

மனம் அலைந்தாலும் மூளை பேச்சிலும் பாவத்திலும் கண்ணும் கருத்துமாயிருந்தது.

“My bounty is as boundless as the sea,
My love as deep; the more I give to thee,
The more I have, for both are infinite.”

அன்று மிகச் சிறப்பாக நடித்ததாகப் பட்டது. அதையே மிஸ்ஸும் உறுதி செய்தாள்.

வசன உச்சரிப்பில் மிகச் சிறப்பான ஏற்ற இறக்கங்கள் வந்தமர்ந்து கொண்டன எனப் பாராட்டினாள். “யூ ஆர் வெரி கான்ஃபிடெண்ட் டுடே” என்றாள். நிறைவாக இருந்தது. சித்தி ப்ரேஸியர் பற்றிச் சொன்னது எல்லாம் சரியே என நினைத்துக் கொண்டாள்.

நடக்கும் போது மார்புகள் காற்றில் மிதப்பது போல் அவளுக்குப் பிரமை தட்டியது.

தனக்குத் தானே சிரித்துக் கொண்டு கிளம்பினாள். ஒத்திகையினால் தாமதமாகி பள்ளிப் பேருந்தைத் தவற விட்ட நாட்களில் இரண்டு முறை அப்பாவுடன் வீடு திரும்பி இருந்தாள். மீதி நாட்கள் அரசுப் பேருந்து. பள்ளி வாசலில் பஸ் ஏறினால் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு அரை கிமீ தொலைவில் இறங்கிக் கொள்ளலாம். அப்பாவுக்கு அழைக்காமல் இன்று பஸ்ஸிலேயே போகலாம் என்று தோன்றியது.

23சி பேருந்து கர்ப்பஸ்த்ரீ போல் பிதுங்கியபடி மெல்லமாய் வந்து கொண்டிருந்தது.

*

டாக்டர் வழிகாட்டுதலிலும் எந்த மாற்றமும் தென்படவில்லை. பிறகு பத்திரிக்கை விளம்பரம் பார்த்து ப்ரெஸ்ட் டெவலப்மெண்ட் பில்ஸ் வாங்கிப் போட்டுப் பார்த்தாள். யாரோ சொன்னார்கள் என ஓர் ஆயுர்வேதத் தைலம் வாங்கி வந்து தினம் தூங்கும் முன் காம்பைச் சுற்றித் தடவினாள். எதற்கும் அவள் முலைகள் முளைக்கவில்லை.

மார்புகளில் பால் சுரக்கிறது எனும் போது பால் குடித்தால் மார்பு பெரிதாகுமோ என்றெண்ணி பாலே சேர்க்காதவள் தினமும் ஒரு பெரிய டம்ளரில் பால் குடித்து புறங்கையால் வாய் துடைத்து நம்பிக்கையுடன் பள்ளி கிளம்பிய நாட்களும் உண்டு.

சினேகிதி ஒருத்தி மார்பு பருக்கும் என ஓர் உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்தாள். அதையும் சில மாதங்கள் தவறாமல் தினசரி செய்து வந்தாள். நெஞ்சு பெரிதாகி விட்டது போல் கனவு கண்டு கட்டிலிருந்து கீழே உருண்டு விழுந்தது தான் மிச்சம்.

“நம்பகமான ஹார்மோன் இஞ்செக்ஷன்கள் இருக்கின்றன, முயற்சிக்கலாம்.” என அடுத்த முறை போன போது அந்த டாக்டர் சொன்னாள். அப்பா மறுத்து விட்டார்.

“அவ குழந்தை. ஊசி, ட்ரீட்மெண்ட் அது இதுன்னு அவ உடம்பை ரணமாக்காதீங்க.”

*

இறங்க வேண்டிய நிறுத்தம் நெருங்கியதும் வேர்வை வீச்சக் கூட்ட நெரிசலைப் பிளந்தபடி படிகளுக்கருகே முன்னகர்ந்தாள் ரேவதி. அப்போது கூட்டத்தினிடையே முளைத்த கை ஒன்று மலரை வெடுக்கெனப் பிடுங்குவது போல் அவள் வலது முலையை இரண்டு முறை கசக்கி நீங்கி ஒளிந்தது. என்ன நடந்தது என்றுணர்ந்து கோபமுற்று யார் எனப் பார்ப்பதற்குள் அந்த நிறுத்ததில் இறங்கும் கூட்டம் அவளை உந்தித் தள்ளி இறங்க வைத்தது. பின்னால் யார் யாரோ சிரிப்பது போல் கேட்டது.

ரேவதிக்கு சட்டெனக் கண்களில் நீர் பொங்கியது. அழுத்தப்பட்ட முலை மரத்துப் போனது போல் தோன்றியது. மனசெல்லாம் பற்றி எரிந்தது. தடுமாறி நடந்தாள்.

வீடு வந்ததும் அறைக்குள் புகுந்து தாழிட்டு, படுக்கையில் விழுந்து தேம்பினாள்.

சட்டென எழுந்து டாப்ஸையும் ஸ்லிப்பையும் கழற்றி விட்டு, முரட்டுத்தனமாய்க் கொக்கிகளை விடுவித்து ப்ரேஸியரைக் கழற்றி அறையின் மூலையில் எறிந்தாள்.

மீண்டும் படுக்கையில் வந்து மல்லாக்க விழுந்தாள். சற்று ஆசுவாசமாய் இருந்தது.

திரும்பி அலமாரியிலிருந்த பார்பி பொம்மையைப் பார்த்தாள். ப்ரேஸியருள் சிக்கிக் கொண்டு சிரிக்கும் அதன் மீது கழிவிரக்கம் பிரவாகிக்க, மார்பு சுரந்தது ரேவதிக்கு.
-ரைட்டர்


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...