ஒரு வழியாக என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பினை படித்து முடித்தாயிற்று. மன அழுத்தம் சென்ற இரண்டு வாரங்களாக உச்சத்தில் இருந்த நிலையில் வார இறுதியில் அனைத்துக் கதைகளையும் தொடர்ச்சியாக படித்து முடித்தேன். ஒவ்வொரு கதையின் முடிவிலும் துக்கம் தொண்டையின் வழியே சென்று நேரடியாக நெஞ்சை அடைத்ததைப் போல உணர்ந்தேன். மிகை படுத்திச் சொல்லவில்லை. இது நடந்தது உண்மை. ஜெயமோகனை என் எழுத்துக்கு வித்திட்ட மிகப் பெரிய ஆளுமையாகவே பார்கிறேன். சற்று அவர் மேல் கோபமும் வரத்தான் செய்கிறது. கோபத்திற்கான முதல் காரணம் என்னை நான் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளனாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஊமைச் செந்நாய் மற்றும் அறம் தொகுப்பினை படித்தவுடன் என் எண்ணம் அனைத்தும் தவுடு பொடி ஆகிவிட்டது. நான் இந்நாள் வரை எழுதியிருந்த சிறுகதைகளை வலைத்தளத்தில் வெளியிடவே கூச்சமாக உள்ளது. இன்னும் எவ்வளவோ உழைக்கவும், படிக்கவும் வேண்டியிருக்கிறது. மெல்ல அவரது தாக்கத்தை என் எழுத்திலிருந்து வெளியேற்றவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது படைப்புக்களை வாசித்து வரும் நான் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு எழுந்து எனக்கென தனிப் பாதை ஒன்றை போட்டுக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் அறை கூவலும் என் முன் தடை கற்களாக நிற்கின்றன. அவற்றிலிருந்து கூடிய விரைவில் மீண்டு வந்து எனக்கென ஒரு பாதையை அமைப்பேன்.
இன்னொரு கோபம், மனித உணர்வுகளுக்குள் கூறிய கத்தியை நுழைத்து ஸ்தம்பிக்கச் செய்து, ஆழ்மனக் குமுறல்களை வெளிப்படுதவைக்கின்றன. அறம் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் பல இடங்களில் கண்களில் ஈரமும், மூக்கை உறிஞ்சிக்கொள்ளும் செய்கையையும் நான் வெளிக்காட்டாமலே இல்லை. ஜெயமோகனை "hitchcock of human emotions" என்று புனைப்பெயர் சூட்டி அழைக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன்.
அறம் தொகுப்பின் மூலம் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்யாமல் ஒரு எழுத்து இருந்தால் அது முழுப் படைப்பாகாது என்பதை நன்கு தெரிந்துகொண்டேன். சமூக மாற்றத்துக்கு தேவைப் படும் தர்கவாத விளக்கங்களும், அவசியங்களும் மிக அழகாக வெளிக்கொனர்ந்திருக்கிறார் ஜெயமோகன். அந்தந்த கதையின் மாந்தர்கள் அறத்தின் வழியே வாழ்க்கை நெறிகளை பின்பற்றியவர்கள். அவர்கள் கதை மாந்தர்கள் மட்டும் அல்ல, உண்மை மனிதர்களும் கூட. குறிப்பிட்டு சொல்லப்போனால் யானை டாக்டரின் ஜே கே, சோற்றுக்கணக்கின் கெத்தேல் சாஹிப், நேசமணி நாடார், மத்துறு தயிர் கதையின் ராஜம் நாடார் போன்ற உண்மை மனிதர்களின் வாழ்க்கை நம்மை உணர்ச்சிச் சரடுகளால் பின்னிக்கொண்டு கதை படித்து பல நாட்களுக்கு கட்டவிழ்க்க மறுக்கிறது. இதுவே ஒரு படைப்பாளியின் வெற்றியாக நான் கருதுகிறேன்.
அறம் தொகுதியில் உள்ள கதைகளின் மையம் "அறம் என்றால் இது தான்" என சுட்டிக்காட்ட ஜெயமோகன் முயற்ச்சிக்கவில்லை. அறம் சார்ந்த ஓர் அக எழுச்சியில் இருந்து அக்கதைகள் அனைத்தும் தொடங்குகின்றன, அவ்வளவுதான். பலசமயம் அறத்தின் முகங்களை சுட்டிக்காட்டுகின்றன. சிலசமயம் அறம் திகைத்து நிற்கும் இடங்களை. அறம் என்றால் என்ன என்றல்ல அறம் எப்படி வாழ்வில் செயல்படுகிறது என்றே அக்கதைகள் வினவிக்கொள்கின்றன. அறம் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை. நம் காலகட்டத்திலும் எங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.
கொஞ்சம் மிகையாக இருந்தாலும் என் இதயத்தின் உள்ளிருந்து வரும் வார்த்தை இது... "ஜெயமோகனுக்கு அறம் தொகுப்புக்காக ஞான பீட விருதோ, அல்லது ஏன், booker prize கூட கொடுக்கலாம். அத்துனை ஆழமான படைப்புகள் இவை.
இத்தொகுப்பின் குறிப்பிட்ட சில கதைகளின் அலசலை செய்திருக்கிறேன்.
மத்துறு தயிர்
இக்கதை குருசீட உறவின் கதை மட்டும் அல்ல. இரண்டுவகையான உணர்ச்சிநிலைகளின் கதை. உணர்வுரீதியாக வாழ்க்கையைப்பார்ப்பதற்கும் சமநிலையாக வாழ்க்கையைப்பார்ப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு.
ராஜம் அண்ணாச்சி யார் என்று யூகிக்க முடியவில்லை. அந்த நாயர் பெண்ணும் யாரென்று பல முறை கூகுளில் வினவி இருப்பேன்! உயிர் பிரிந்தது போல ராஜம் அந்த பெண் ஊரை விட்டு சென்றதும் துடித்தது, பேராசிரியர் ராஜம் குறித்து பட்ட வேதனை, ராஜம் அண்ணாச்சியின் தந்தை அம்மன் முன்பு கையை வெட்டி ரத்தம் ஊற்றி அழுதது, பேராசிரியரை எதிர்கொள்ள முடியாமல் ராஜம் பட்ட வேதனை, ஒவ்வொன்றையும் பல நூறு மடங்கு துல்லியமாக உணர்ந்து ஒவ்வொருமுறை படிக்கும் பொழுதும் கண் கலங்கி இருக்கிறேன்!
காதலில் உண்மையாக இருந்தவர்களில், மீள முடியாமல் மூழ்கியவர்களே அதிகம்! மீண்டு வந்து விடுதல் ஒரு பெரும் வெற்றி உணர்வையும், இறுமாப்பையும் அளித்தாலும், இறப்புவரை உள்ளுக்குள் ஒரு முள் குத்திக்கொண்டே இருக்கும் போலும்! ராஜம் அண்ணாச்சியாக என் நண்பன் ஒருவனையே நினைத்துக்கொண்டேன். கூடுதல் சிறப்பம்சம் கம்பனையும் அவனது கவிதைகளையும் கதையின் போக்கில் உள்ளே நுழைத்த எழுத்தாளருக்கு hats off!!!
யானை டாக்டர்
குழந்தைகள் தங்களுக்கு கிடைத்த பிரியமான பரிசு பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து அதனை கட்டி பிடித்து தான் உறங்கி போவர்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த குழந்தை கண்டுகொள்ளும் போது அடையும் ஆச்சரியமும் மகிழ்வும் தான் யானை டாக்டர் கதையைப் பற்றி பதிவு செய்யும் நான் இன்று அடைந்த மனநிலையும். ஒரு துலைந்து போன புதையலை கண்டெடுத்த உணர்சிமிகுதியை அடைந்தேன்.
அப்படி என்ன இருக்கிறது இந்த கதையில்?
கதையை வாசித்த அத்தனை பேரின் மனதிலும் புழுவும்,யானையும் நிச்சயம் வருடி கொண்டு இருக்கும்.
டாக்டர். கே போல தனது வாழ்வின் ஒரு நொடியினையாவது மற்ற உயிர்க்கு அர்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சியம் எழும்.
ஆதியில் இயற்கையின் அத்துணை அம்சங்களுடன் இணைந்து வாழ்ந்த மனிதனின் வாழ்வு எதனுடனும் வேறு படவில்லை.அவனுக்கு எறும்பும் யானையும்,தவளையும் சிங்கமும் அனைத்தும் உயிர்கள் தான்.மனித உயிர் தான் பெரியது என்ற எண்ணம் நிச்சயம் இருந்திருக்க முடியாது அந்த மனிதனின் கால்கள் இந்த மண்ணின் ஈரத்தையும் கோடி கணக்கான பூச்சிகளையும்,தாவரங்களையும் நிச்சயம் உணர்ந்து இருந்திருக்கும்.
கண்டிப்பாக மனித மனத்தின் ஆழங்களை சென்று அடையும் இந்த கதை .
புழுவினை பற்றிய இந்த 15 வரிகள் போதும் , ஜெயமோகனின் மொழி ஆளுமையையும், சொல்நேர்த்தியையும் கொண்டாட!!!!
"புழுக்களைப்பாத்து பயந்துட்டேள் என்ன?’ என்றார் டாக்டர் கே. ’புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும். ..குண்டுக்குண்டாக மென்மையாக புசுபுசுவென்று ஆவேசமாகத் தின்றுகொண்டு நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது மனம் மலைப்புறும். வெண்ணிறமான தழல்துளிகளா அவை? அறியமுடியாத மகத்துவம் ஒன்றால் அணுவிடை வெளி மிச்சமில்லாமல் நிறைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் என்று அப்போது தோன்றி புல்லரித்துவிடும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்த துளிக்கு உள்ளே இருக்கின்றன சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை"
காட்டு யானையின் உலகமும் அது மனிதனின் மிக மோசமான செயல்களினால் பாதிக்கப்படும் விதங்களும் மேலும் கோவில் யானைகளின் சலிப்பூட்ட கூடிய அனுதின வாழ்கையும் நாம் என்றும் உணர்ந்திருக்க மாட்டோம்.
"யானை டாக்டர்" கிருஷ்ண மூர்த்தி அவர்களின் எளிய உருவமும் இந்த கதையாடலின் மூலமாக விவரிக்கப்படும் அவரின் பேச்சும் செயல் பாடுகளும் நம்மை நிச்சயம் ஒரு லட்சிய பாதையினை நோக்கி கூட்டி செல்லும்.அவரினை போன்ற அற்புத ஆன்மாவை நமக்கு இந்த உன்னத கதையின் மூலம் அறிமுகபடுத்திய ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி ..
அதிகாரத்தாலும், எதை குறித்தும் அக்கறையற்ற மனநிலையாலும் நிரம்பி வழியும் நம் மனதினை நிச்சயம் ஒரு சுதந்திர வாழ்வுக்காக ஏங்கும் நம் மன நிலையை இந்த உண்மை கதை உருவாக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.என் வலைப்பதிவை வாசிக்கும் வாசகர்களுக்கு என் வேண்டுகோள் - தயவு செய்து யானை டாக்டர் கதையை ஒரு முறை படியுங்கள்....
நூறு நாற்காலிகள்
புத்தருக்கு போதி மரம் போல எனக்கு நூறு நாற்காலிகள். இது போன்ற சமூகங்கள் இருப்பதே எனக்கு தெரியாது என்பது அவமானமாய் இருக்கிறது. இது வரை வாழ்ந்து வரும் போலியான பொருலாசைகொண்ட வாழ்கையை நினைத்து வெறுக்கிறேன். அந்த கையாலாகாத கதாநாயகனை தோளோடு சாய்த்து தேற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரே ஒரு பிரச்சனை…அவனுக்கு ஆறுதலாய் நான் இருப்பதை விட்டு விட்டு நான் கதறி அழுது விட வாய்ப்பு நிறைய உண்டு…..
இதைப் போன்ற நெஞ்சை உலுக்கிப்போடும் கதை இப்படி ஒரு நேர்மறையான முடிவை அடையும் என்று சற்றும் எதிர்பார்கவில்லை நான். பெரும் மன நிறைவைத் தந்தது. முழுவதுமாய் வெளிப்படுத்த முடியாத என் உணர்சிகளை என் எழுத்துக்களின் மூலம் ஜெயமோகனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
சோற்றுக்கணக்கு
மனிதன் எதற்கு வேண்டுமானாலும் கணக்குப் பார்க்கலாம். ஆனால் சோற்றுக்கு கணக்குப் பார்க்கலாமா? உண்மையில் உற்றார் உறவினர் என்பவர்கள் கணக்குப் பார்க்கத்தானே செய்கிறார்கள்? அப்படியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு உணவு விடுதி நடத்துபவர் அப்படி இருக்கமுடியுமா? முடியும் என்பதை ஜெயமோகனின் இந்தக் கதை சொல்கிறது. ஜெயமோகனின் அறம் சிறுகதைகளில் சோற்றுக் கணக்கு ஆகச்சிறந்த கதைகளுள் ஒன்று. இந்தக் கதை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் நுட்பங்கள் அநேகம். இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமானது. கதையைப் படித்து முடித்ததும் நம் மனம் கொள்ளும் பரவசம், நம் மூளையில் ஏற்படும் பாய்ச்சல் வார்த்தையில் சொல்லும் தரமன்று.
பசி எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் அறியாதவர்கள் அல்ல. மனிதனுக்கு அவனுடைய வாழ்வில் எத்தனையோ இல்லாமை இருக்கலாம் ஆனால் உணவு இல்லாமையைப் போலக் கொடியது வேறு ஒன்றுமில்லை.
கெத்தேல் சாகிப்பை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ள ஜெயமோகன் காட்டும் மூன்று காட்சிகளின் சித்தரிப்பும், அந்தச் சித்தரிப்பிலிருந்து எழும் அவரது மூன்று பரிமாணங்களையும் நாம் உணரவேண்டியது அவசியம்.
முதல் காட்சி:
மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச் சாயங்காலம் சாப்பிடும்போதே தெரிந்தது. எல்லாரும் அப்பளம் பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னை அழைக்கவில்லை. சாப்பிட்டு முடித்தபின்னர் அடுப்படியில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.
இரண்டாம் காட்சி:
அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்ப கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளும். கையோ மனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசி சோறும் அவள் அள்ளி வைக்கையில் நான் நாலாவது உருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன். அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும். பலவீனமாக ’சாப்பிடுடா’ என்பாள் அம்மா.
மூன்றாம் காட்சி:
என்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன். சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன். ‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு? தின்னீன் பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி! கடவுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்து விட்டேனே. என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி வாய் வரைக்கும் வழிந்தது.
உறவும் சரி, பெற்ற தாயும் சரி சோற்றுக்குக் கணக்குப் பார்க்கும்போது கெத்தேல் சாகிப்பின் இந்தப் பண்பு வார்த்தைகளால் அளவிட முடியாதது. அவர் உணவு விடுதி நடத்துகிறார். எல்லோருக்கும் இலவசமாக உணவு கொடுக்கிறார். பணம் இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் வெறுமே சாப்பிட்டுப் போகலாம் என்பது ஒரு பக்கமிருப்பினும், அதைச் செய்யும் விதத்தில் அன்பு, இரக்கம், பாசம் இருப்பது அவசியம். இல்லையேல் அந்தச் செயலால் ஒரு பயனும் இல்லை. இலவசம் என்பதற்காகச் சாப்பிடுபவன் குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்ற அவரின் உயர்ந்த பண்பு இதனால் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல, அந்த உணவின் ருசி, இது வெறும் கடனுக்காகச் செய்யும் காரியமல்ல கடமைக்காகச் செய்யும் காரியம் என்பதையும் நமக்குக் காட்டுகிறது. இங்கேதான் கெத்தேல் சாகிப் வானளவு உயர்ந்து நிற்கிறார். இது அவரது முதல் பரிமாணம்.
தான் பல வருடங்களாக சாப்பிட்டதற்கு ஒட்டுமொத்தமாக பணத்தை உண்டியலில் போடுகிறான் கதைசொல்லி. ஒரு பக்தன் கடவுளின் சன்னிதியில் உண்டியலில் காணிக்கையிடும் காட்சிக்கு நிகரானது இது. கடவுளுக்கு நாம் ஏதேனும் உபகாரம் செய்யமுடியமா? இருந்தும் நம் சிற்றறிவு அதில் சற்றே திருப்பதி அடைகிறது. அவரது சோற்றுக் கணக்கை எத்தனை எத்தனை பணம் கொட்டிக் கொடுத்தாலும் தீர்க்கத்தான் முடியுமா? ஏழேழு ஜன்மத்திற்கும் தீர்க்க இயலாத ஒரு கடன் அல்லவா? கெத்தேல் சாகிப் அவனைப் பார்த்து சற்றே தலையசைத்து ஒரு பார்வை பார்த்து விடமாட்டாரா என்ற ஏக்கம் அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஏற்படுகிறது. ஆனால் அப்படி பார்த்துவிட்டால் அவர் செய்த காரியத்தின் மகத்துவம் நமக்கு விளங்காமலே போய்விடும். மாறாக நம் அகங்காரம், “பார்த்தாயா இதுவரை சாப்பிட்டதற்கு மொத்தமாக கணக்குத் தீர்த்துவிட்டேன்” என்று கொக்கரிக்கும். இத்தகைய காரியத்தைச் செய்வதும், அதை அன்புடன் செய்வதும் மட்டும் போதுமானது அல்ல. மாறாக அதற்கான பலனின் மீதும் பற்று வைக்காமல் இருப்பது போற்றுதற்குரியது. இந்த இடத்தில், கீதை காட்டும் கிருஷ்ணனின் தரிசனம் போன்று, கெத்தேல் சாகிப்பின் விஸ்வரூப தரிசனம் வெளிப்படுகிறது. நாம் அவரைக் கண்டு பரவசமடைந்து பேச்சடைத்து நிற்கிறோம். இது அவரது இரண்டாவது பரிமாணம்.
அவர் வெறும் உணவை மட்டும் தன் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறவில்லை மாறாக உணவுடன் சேர்த்து அற உணர்வையும் பரிமாறுகிறார். இந்த அறம், நேர்மை, அன்பு, இரக்கம் என்பது எப்போதும் ஒரு தரப்பை மட்டும் சார்ந்ததல்ல. இரண்டு தரப்பையும் சார்ந்தது. எனவே ஒரு தரப்பு மட்டும் தீவிரத்துடனும், தீரத்துடனும் இவற்றை நடைமுறைப் படுத்தும்போது அடுத்த தரப்பினரும் அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுவே காந்தியடிகள் மேற்கொண்ட அகிம்சையின் அடிப்படைத் தத்துவம். ஆகவே கெத்தேல் சாகிப்பின் இந்தப் பண்பு கதைசொல்லியிடம் இயல்பாகப் படிந்து விடுகிறது. கிடைத்த பணத்தை தன் அத்தையிடம் கொடுத்து அவள் கணக்கைத் தீர்க்கப்போகிறான் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் அவளது மகளைத் திருமணம் செய்வதன் மூலம் அந்தக் கணக்கைத் தீர்க்கிறான். தன்னைப் புறக்கணித்து அவமானப்படுத்திய அத்தையின் மகளைக் கட்டிக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை. இருந்தும் அப்படி ஏன் செய்கிறான் என்றால் அதற்குக் காரணம் கெத்தேல் சாகிப்புதான். அந்த உணர்வை அவனுக்குக் கொடுத்தது அவர்தான். இங்கே அவரது மூன்றாவது பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
சோற்றுக்கணக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கதை. அறம் சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை. எப்போது படித்தாலும் புதிது போல இந்தக் கதை என்னை வெகுவாக அலைக்கழிக்கிறது. படித்துப் படித்துத் தீராத கதை இது.
ஜெயமோகனின் கதைகளைப் படிக்கும் போது எனக்கு கிட்டத்தட்ட இளையராஜாவின் இசையை கேட்கும் போது வரும் அதே உணர்வு ஏற்படுகிறது. ஏன் என்று தெரியவில்லை.இன்னும் இந்தப் படைப்பை பற்றி எவ்வளவோ எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. மாயனூரின் அகண்ட காவிரியில் காவிரித் தாயின் முழுப் பிரயோகத்தில் குளிப்பதுபோல் ஒருசுகமான அனுபவம் இந்த கதைகளை படித்தது எனக்குள் ஏற்படுத்தியது. நல்ல மனிதர்கள், நல்ல நினைவுகள் மேலும் மேலும் நமக்கு அறிமுகமாவதில் மிகுந்த மகிழ்ச்சி!!!
அறம் தொகுப்பின் லிங்க் கீழே
http://www.jeyamohan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2#.VWNNn0bWG50


கருத்துகள்
கருத்துரையிடுக