நான் ஒரு இன்சினியரிங்முடித்தமாணவன். தேர்வில் பாஸ் ஆவதற்காக உப தலைப்பிட்டு , பாயின்ட் பை பாயின்டாக எழுதி அதற்கு முன் ஒரு புல்லட் குறியீடு இட்டு, சம்மந்தமே இல்லாத கருத்துக்களை அடிக்கோடிட்டு விடைகள் சரியானவை என்று திருத்துபவர்களை நம்பவைத்துப் பழக்கப்பட்டவன் என்பதால் இந்தக் கட்டுரையும் அதே வடிவத்தில் வந்துவிட்டது தயவுகூர்ந்து பொருத்தருளவும்.
இஞ்சினியரிங்க் படிப்பதற்கான காரணங்கள்:

இஞ்சினியரிங்க் படிப்பதற்கு பல்வேறு காரனங்கள் (காரணங்களுக்கு ரெண்டு சுழி ந வா இல்லை மூன்று சுழி ந வா எனத் தெரியாத காரனத்தால் ஒரு இடத்தில் ரெண்டு சுழியும் இன்னொரு இடத்தில் மூன்று சுழியும்பயன்படுத்தப்படுகிறது.) உள்ளன அவை யாவை எனில்
- "இஞ்சினியரிங்க் படிக்கவைங்க பய நல்லா வருவான்" ஒன்னறை லட்சம் இஞ்சினியரிங்க் அப்ளிகேசன் விற்க இது போல யாரோ ஒரு புண்ணியவான் ஏதோ ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதைப் போல பொறுப்பில்லாமல் அப்பாவின் காதில் போட்டுவிடுவதுதான் காரணம்.
- "எங்க நாத்தனார் பையன் இஞ்சினியரிங்க் தான் படிச்சான் உடனே வேலை கிடைச்சிடுச்சு இப்ப காரு வீடுனு செழும்பா இருக்கான்" என்று அம்மாவை ஏத்திவிடும் எதிர்வீட்டு ஆன்டிகளின் நாத்தனாரின் மகனுக்கு வயது 40 இருக்கும்.
- "என் பையன் ELECTRICAL இஞ்சினியர் உங்க பையனையும் இஞ்சினியர் ஆக்கிட்டோம்னா அண்ணனே வேலை வாங்கி கொடுத்திருவான்" எனச் சொல்லும் பெரியப்பா சித்தப்பாக்களுக்குத் தெரியாது தம்பி படிச்சு முடிக்கும் போது ரெசசன்ல (பொருளாதார நெருக்கடி) அண்ணனுக்கே வேலை போய்டும் என்று..
- +2 லீவில் இருந்தே கேட் எக்சாம்,வின்டோ எக்சாம் போன்றவைகளுக்கு பயிற்சி எடுத்து இஞ்சினியரிங்க் முடித்து எம்.எஸ் பண்ண யு.எஸ் போகும் உயர்குடிப் பொதுமக்களும் இஞ்சினியரிங்க் வருகிறார்கள்.
- கல்யாணப்பத்திரிக்கையில் பேருக்குப் பக்கத்தில் பி.இ என்று போட்டால் பெருமையாக இருக்கும் என்று எண்ணி வருடத்திற்கு இரண்டு இலட்சம் செலவு பண்ணி மேனேஜ்மென்ட் சீட்டில் சேரும் பண்ணையார் மகன்களும் தொழிலதிபர் மகள்களும் வந்து இருக்கிறார்கள்.
- இது தவிர்த்து பாயின்ட் செவன் ஃபைவில் கட் ஆஃப் மார்க் மிஸ் ஆகி மருத்துவப்படிப்பைத் தவரவிட்டவர்களும் வருகிறார்கள்
"நீ ஏம்பா இஞ்சினியர் சேர்ந்த?" கல்லூரியில் அன்பழகன் சார் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் "இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் மிடில்கிளாசில் இரண்டாவது தலைமுறையாக படிக்கவரும் ஒருவன் இஞ்சினியரிங்கை விட்டு வேறென்ன படிக்கமுடியும்"
இஞ்சினியரிங்க் படிப்பவர் என்னவாக முடியும்?
ஒவ்வொரு செமஸ்டரிலும் குறைந்தது மூன்று அரியர் வைத்துவிட்டு "அரியர் வைக்காத படிப்பு அரைப் படிப்பு" என்று மார் தட்டும் அறிவாளிகளைப் பற்றி இங்கு பேசப்போவதில்லை. (மன்னிக்கவும் நானும் மதுரைக்காரன் தான் டா மாதுரி ,நானும் அரியர் வைச்சவன் தான்பா)மற்றவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
1)இஞ்சினியரிங்கை தனது பேசனாக வைத்திருக்கும் , தனது பள்ளி நோட்டில் தனது பெயருக்குப் பக்கத்தில் இஞ்சினியர் என்றெழுதி பெருமிதம் அடையும் நபர்கள் முதல் வகையினர். இவர்கள் நிலைமை தான் மிகவும் பாவம். நன்றாய் படித்து எயிட் பாயின்ட் ஃபைவ் நைன் பாயின்டுகு மேல் சி.ஜி.பி.ஏ வைத்திருக்கும் இவர்கள் வேலைக்கு என்று போய் உட்கார்ந்தால் இதுவரை அவர்கள் பள்ளியில் இருந்து கல்லூரி வரை படித்திராத ஆப்டிடியூட் கேள்விகளை முதல் ரவுண்டில் பார்த்து, கரண்ட்டு கம்பியில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென கரண்ட் வந்தைப் போல ஷாக்காகி விடுவார்கள்.
பின்பு ஆறு மாதம் ஆப்டிடியூட் கோச்சிங்க் போய் முதல் ரவுண்டை கடந்து இரண்டாவது ரவுண்டான க்ரூப் டிஸ்கஸன் சுருக்கமாக ஜி.டி க்கு வருவார்கள். அதிகபட்சம் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால் (இல்லை என்றால் முதல் வருடமே வீட்டாவில் இங்கிலீஷ் கோர்ஸ் படித்து தெரிந்திருப்பார்கள்) எளிதாய்க் கடந்துவிடலாம் என்று வந்து உட்கார்ந்தால் அமெரிக்க பொருளாதர மந்தநிலைக்கு என்ன காரணம்? என்று கேட்பார்கள். ஃப்ரீ டைமில் லைப்ரேரி பக்கம் போனால் கூட விரட்டிவிடும் வாத்தியார்களிடம் படித்தவர்களுக்கு அது எப்படித் தெரியும்?. ஜி.டி.யில் பேசுவது எப்படி என்று ஒரு மாத க்ளாஸ் போய்விட்டு அந்த ரவுண்டையும் க்ளியர் பண்ணினால் டெக்னிகள் ரவுண்ட் என்று ஒன்று வைக்கப் படும் தத்திபுத்தி தெரிந்ததை எல்லாம் ப்ரொகிராம் என்று எழுதிவைத்து அந்த ரவுண்டைக் கடந்து போனால் டெக்னிகள் எச்.ஆர் "சர்டிஃபிகேட் கோர்ஸ் எதாவது முடிச்சிருக்கீங்களா?" என்று கேட்பார்.அதையும் மூன்று மாதத்தில் முக்கிப் முடித்துப் போகும் போது அடுத்த பேட்ச் ஸ்டுடன்டஸ் பாஸ் அவுட் ஆகி வந்திருப்பார்கள்.
முன் அனுபவங்களின் மூலம் எல்லா ரவுண்டையும் காலி பண்ணினால் ஃபைனல் எச்.ஆர் கேட்பாரு "கோர்ஸ் முடிஞ்ச ஒரு வருசமா ஏன் வேலை கிடைக்கல" ஆனால் இந்த வகையினருக்குகோவமே வராது. ஏனென்றால் எச்.ஆரிடம் கோவப்படக்கூடாது என்பதை எந்த கோர்ஸ் படித்தாலும் சொல்லித் தருவார்கள் அதற்கு ஒரு ஸ்மால் கதை ஒன்று சொல்வார்கள். ஒரு இன்டர்வியூவில் எச்.ஆர் கேட்டாராம் "உங்கள் அம்மா ஒரு ’ப்ராஸ்ட்டிட்யூட்’ என்று நான் சொன்னால் நீங்க என்ன சொல்விங்க?" அந்தப் பையன் சொன்னானாம் "ஆனால் எங்க அப்பா தான் ஒரே கஸ்டமர் என்று சொல்வேன்" .. அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது.
சில சமயம் படித்துக் கொண்டிருக்கும் போதே மேற்சொன்னவை எல்லாம் நடக்கும்.. மேற்கண்ட கோர்ஸ்களை கல்லூரி நிர்வாகமே ஒரு நிறுவனத்தைப் பிடித்து எக்ஸ்ற்றா க்ளாஸ் என்று சொல்லி எக்ஸ்ற்றாடினரி ஃபீஸ் புடுங்குவார்கள்.பிறகு படித்துக் கொண்டிருக்கும் போதே கேம்பசில் செலக்டாகி 'அப்பாடா' என்று உட்கார்ந்து தினத்தந்தியை எடுத்துப்படித்தால் "மூன்று வருடங்களுக்கு முன்பு கேம்பசில் செலக்டான மாணவர்களை இன்னும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளாத்தால் கம்பேனி முன்பு போராட்டம் நடத்தினர் " என்று இருக்கும்.. "கடன் பட்டார் நெஞ்சம் போல்" என்பது எல்லாம் அவர்களது மனநிலைக்கு அருகில் கூட நிற்காது...
2) இரண்டாம் வகையினர் தத்திதத்தி இஞ்சினியரிங்க் சேர்ந்துவிட்டோமே என பாஸ் ஆனவர்கள்.. ஆரம்பத்தில் வேலைக்காக அலைந்து முன்னவர்களோடு போட்டி போடமுடியாததால் பி.பி.ஓ வில் செட்டில் ஆகிவிடுவர் சிலர்.. சிலர் ப்ளேஸ்மென்ட் ட்ரெயினிங்க் சென்டரில் சேர்ந்து முதல் வகையினருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பர்.. கொஞ்சம் காசு இருந்தால் எம்.இ சேர்ந்து அதை முடித்து இஞ்சினியரிங்க் கல்லூரியில் வாத்தியாராகி இந்த இரண்டு வகையினரை உருவாக்கிக் கொண்டிருப்பர்.
(எட்டு மார்க்குக்குத் தேவையான அளவு எழுதிவிட்டதால் கட்டுரை இத்துடன் முடிகிறது. போங்க போய் புள்ளக்குட்டிகளை இஞ்சினியரிங் படிக்க வைங்க)
#மகேஸ்வரன்
கருத்துகள்
கருத்துரையிடுக